Saturday 16 April 2016

15.மேருவை செண்டால் அடித்த படலம்!

மதுரை மீண்டும் செழிக்க, கவலை நீங்கிய உக்கிரபாண்டியன் மனைவி காந்திமதியுடன் இன்புற்று வாழ்ந்தான். காந்திமதி கர்ப்பமானாள். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீரபாண்டியன் என அவன் பெயர் சூட்டினான். குழந்தை வீரபாண்டியனுக்கு மூன்று வயதாகும் போதே அவனுக்கு எல்லா தெய்வ ஸ்லோகங்களும் அத்துப்படியாகி விட்டது.
அவனது மழலைக்குரலில் அந்த ஸ்லோகங்களைக் கேட்க தேனாய் இனிக்கும். காந்திமதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சோமவார விரதத்தை தொடர்ந்து அனுஷ்டிக்கும் தம்பதிகளுக்கு இதுபோன்ற புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கும் என்பது நியதி. குழந்தையை குருகுலத்திற்கு அனுப்பினர் பெற்றோர். வீரபாண்டியன் மிகச்சிறப்பாகப் படித்தான். தந்தையைப் போலவே வாள்சண்டை, மற்போர் இன்னும் பல கலைகளில் வீரமிக்கவனாகத் திகழ்ந்தான். இந்த சமயத்தில் மதுரையில் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டது. இப்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்துக்கு காரணம் நவக்கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக ஏற்பட்டது. அரண்மனை ஜோதிடர்களையும், புரோகிதர்களையும் அழைத்த உக்கிரபாண்டியன் இந்த நிலையில் இருந்து மீளும் வழிமுறைகளை ஆலோசித்து சொல்லும்படி உத்தரவிட்டான். புரோகிதர்களின் ஆலோசனைப்படி, ஓராண்டு காலத்திற்கு நவக்கிரக சஞ்சாரப்படி மழையில்லை என கணிக்கப்பட்டது. இம்முறை, உக்கிரபாண்டியன் இந்திரனைப் பார்க்க விரும்பவில்லை. மாறாக, சோமசுந்தரப்பெருமான் கோயிலுக்குச் சென்று அந்த அண்ணலையும், அங்கயற்கண்ணி மீனாட்சியையும் பணிந்தான். அண்ணலோ அசையாமல் இருந்தார். இதென்ன சோதனை? என்று வருத்தம் பொங்க அரண்மனை வந்து சலிப்புடன் படுத்த உக்கிரபாண்டியனின் கனவில் சோமசுந்தரர் தோன்றினார்.

உக்கிரபாண்டியா! வருத்தம் வேண்டாம். மழை பெய்யவில்லை என்றால் மக்களின் பஞ்சம் போக்க வேறுமார்க்கம் தேட வேண்டும். நான் ஒரு வழி செல்கிறேன். இமயத்தைக் கடந்து சென்றால் மேரு என்னும் மலையரசன் இருக்கிறான். அவன் மலைவடிவிலேயே இருப்பான். அந்த மலையின் குகைக்குள் ஏராளமான செல்வத்தை ஒளித்து வைத்திருக் கிறான். அதன் ஒரு பகுதியை எடுத்து வந்தால் கூட உலகம் உள்ளளவும் மதுரை செழிப்புடன் இருக்கும். செல்வம் வளம் மிக்க மேரு ஆணவம் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது. அதன் ஆணவத்தை நான் ஏற்கனவே உனக்குத் தந்த செண்டால் அடித்து தகர்த்து விடு. பின்னர், செல்வத்துடன் நாடு வந்து சேர். இது மிகவும் கடுமையான பயணம். செல்வம் சேர்க்க நினைப்பவன் அதை எளிதில் அடைய இயலாது. கடும் புயலையும், மழையையும், ஏற்றத்தையும், இறக்கத்தையும் கடந்தாக வேண்டும். இதுவே வாழ்வியல் தத்துவம். உன் முயற்சியில் வெற்றி பெற போராடு. புறப்படு, என்று சொல்லி மறைந்தார். விழித்தெழுந்த உக்கிரபாண்டியன் அகம் மகிழ்ந்தான். செல்வம் கிடைப்பதுடன், பாண்டியநாட்டின் பெருமை இமயத்தையும் தாண்டி மேருமலையிலும் நிலைக்கப் போகிறது என்ற பெருமை மிளிர, படைகளை அங்கு புறப்பட ஆணையிட்டான். அமைச்சர் சுமதி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மக்களின் வாழ்த்தொலியுடன் படைகள் புறப்பட்டன. பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசியை அடைந்தனர். கங்கையில் நீராடிய படையினர் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மையையும், அன்னபூரணி யையும் வணங்கி இமயத்தில் ஏறினர். அங்குள்ள நிடத நாட்டைக் கடந்து (நளச்சக்கரவர்த்தியின் நாடு) அவர்கள் மேருமலையை அடைந்தனர்.

மேருமலை செருக்குடன் மிக உயர்ந்து நின்றது. இந்த மலையைத் தான் சிவபெருமான் வில்லாக வைத்துள்ளார். அதனால், உக்கிரபாண்டியன் அந்த மலைக்கு பெரும் மதிப்பளிக்கும் வகையில், மேருமலை அரசனே! நான் பாண்டிய மன்னன் உக்கிரபாண்டியன். மிகுந்த சிரமமான பயணத்தின் பேரில் நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் உம்மிடமுள்ள செல்வக்களஞ்சியத்தை எங்கள் வறுமை நீங்க தர வேண்டும். என்ன காரணத்தாலோ எங்கள் நாட்டில் மழை பொழியவில்லை. மக்களைக் காப்பாற்ற வேண்டியது உம்மைப் போன்ற பேரரசர்களின் கடமை. பொதுநலன் கருதி வந்துள்ள எமக்கு உதவவேண்டும், என்றான். ஆணவம் கொண்ட மேருமலை அசையாமல் நின்றது. உக்கிரபாண்டியன் உக்கிரமாகி விட்டான். ஆணவம் பிடித்த மலையே, இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார், எனச் சொல்லியபடியே, சுந்தரேசப்பெருமான் தனக்களித்த செண்டு என்னும் தங்கப்பந்தால் மேருவின் மீது ஓங்கியடித்தான். அவ்வளவு தான்! பலம்மிக்க மேருமலை ஒரு பந்தின் அடி தாங்க முடியாமல் பிளந்தது. ஆங்காங்கே தீப் பிழம்புகள் கொப்பளித்தன. அந்த மலையில் வசித்த தேவர்களின் மாளிகைகள் நொறுங்கி விழுந்தன. அவர்கள் பதைபதைப்புடன் வெளியே ஓடினர். மேருமலை அரசன் ஓடிவந்து உக்கிரபாண்டியன் முன்னால் வந்து நின்றான்.

யாராலும் அசைக்க முடியாத என்னை ஒரு சாதாரண செண்டால் அடித்து காயப்படுத்தி விட்டாய். இந்த செண்டு சாதாரணமானதாக இருக்க முடியாது. இதன் மகிமையைப் பற்றி சொல், என்றான்.மன்னரே! இது சுந்தரேஸ்வரப் பெருமானால் எனக்கு அருளப்பட்டது. அதைக் கொண்டு அடித்ததால் தான் உமக்கு வலி ஏற்பட்டது. நாம் கேட்ட செல்வத்தை இனியேனும் தந்தருள வேண்டும், என்ற உக்கிர பாண்டியன், மேருமலை தெய்வமே! எங்கள் நாட்டில் மழை பொய்த்துப் போனதற்குரிய காரணம் மலையான உமக்கு தெரியாமல் இருக்க முடியாது. நவக்கிரக சஞ்சாரத்தை உம்மைப் போன்ற மலைகளால் தீர்க்க முடியாதா? என்றான்.மேரு அரசன் இதற்கு பதிலளித்தான். மன்னரே! உம் நாட்டில் மழை பொய்த்ததற்கு காரணம் நவக்கிரக சாரம் மட்டுமல்ல! எனது அசட்டையும் காரணம். நான் தினமும் அங்கயற்கண்ணி மீனாட்சியையும், சுந்தரேஸ்வரப் பெருமானையும் வணங்குவதற்கு விண்வழியில் சில மணி நேரங்களில் தினமும் வந்து வணங்கிச் செல்வேன். நான் வருவது யார் கண்களுக்கும் தெரியாது. என் வருகையால் பொதிகையில் இருந்து புறப்பட்டு வரும் காற்று தடுக்கப்பட்டு, உம் பூமியில் தவறாது மழை பெய்து வந்தது. ஒருமுறை, இந்திரன் உமக்கு தந்த சோதனையால் மழை பொய்த்தது.

நீர் என்னால் உருவாக்கப்பட்ட மேக தூதர்களை மீட்டு மழை பெய்ய வைத்தீர். இப்போது, எனது பாவப்பட்ட செயலால் மழை பொய்த்திருக்கிறது. அதாவது, சமீபத்தில் ஒருநாள் நான் அங்கு பறந்து வந்த போது, விண்வெளியில் ஒரு அழகியைப் பார்த்தேன். அவள் மீது கொண்ட மயக்கத்தால் என் மதுரைப் பயணம் தடைபட்டது. அவளுடன் நான் உறவு கொண்டேன். இதனால், இறைவனை வணங்காமல் தீட்டுப்பட்டேன். அதன்பிறகு, என்னால் மதுரைக்கு வர இயலாமல் ஆகிவிட்டது. ஆனாலும், என்னிடம் ஏராளமான செல்வம் இருந்ததால் இறுமாந்து இங்கேயே இருந்துவிட்டேன். சிவபெருமான் உனக்கருளிய செண்டால் அடிபட்டு பாவ விமோசனம் பெற்றேன். இனிமேல், நான் மீண்டும் பறக்கும் சக்தி பெறுவேன். நீர் விரும்பியபடி, குகையில் இருக்கும் செல்வத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம், என்றது. பாண்டியப் படைகள் குகையை மூடியிருந்த பாறையை நகர்த்தின. அதற்குள் நம்ப முடியாத அளவிற்கு செல்வக்குவியல் இருந்தது. அந்த பொற்குவியலை மலை போலக் குவித்து பல குடிகளுக்கும் அளித்துப் பாதுகாத்தான் உக்கிர பாண்டியன். பாண்டி நாடு முழுவதும் மீண்டும் மழை வளம் பெற்றது. எங்கும் பெருவளங்கள் கொழித்தன. அதனால் உயிர்கள் எல்லாம் பசி நீங்கித் தழைத்து ஓங்கிற்று. உக்கிரபாண்டியனம் பல காலம் ஆட்சி புரிந்து, தனது திருமகனாகிய வீரபாண்டியனுக்கு முடி சூட்டினான். அரசுரிமை தந்தான். பின்னர் சோம சுந்தரக் கடவுளின் திருவடி நீழலை அடைந்தான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...