Saturday 16 April 2016

26. மா பாதகம் தீர்த்த படலம்!

மன்னன் குலோத்துங்கனின் ஆட்சியில் இன்னொரு அதிசய சம்பவமும் நிகழ்ந்தது. அவனது தேசத்தில் பல கொடியவர்களும் வாழத்தான் செய்தனர். அவர்களில் ஒரு அந்தண இளைஞனும் அடக்கம். அவன் சாதாரண கொடியவன் அல்ல! அவனது தந்தை ஆசார அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்பவர். ஆனாலும், முன்வினைப் பயனால், ஒரு கேடு கெட்ட பிள்ளை பிறந்தான். அவனுக்கு எந்த நேரமும் நாட்டியத்தாரகைகளின் வீடே கதியென இருந்தது.
பெற்றவளின் அணி கலன்களைப் பிடுங்கிச் சென்று அவர்களிடம் கொடுத்து சந்தோஷம் அனுபவித்தான். வீடு, வாசல் என எல்லாவற்றையும் அவர்களிடமே கொடுத்து விட்டான். இப்போது ஒரு ஓலைக்குடிசைக்கு வந்த பிறகும், அவன் திருந்தவில்லை. கொடுப்பதற்கு பொருளே இல்லாத நிலையில், காமுகனான அந்தப்பாவி, தனது தாயையே நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார். அந்தக் கொடிய மிருகம் தந்தையையே கொன்று விட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக தாயை இழுத்துச் சென்று விட்டான். அந்தளவுக்கு கொடூர காமுகனான அவன், இப்போது அனாதையாக தெருக்களில் திரிந்தான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. உடல் மெலிந்தது. சக்தியை முழுமையாக இழந்த அவன், ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்த நல்வினைப்பயனால் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தான்.வானுயர்ந்த கோபுரத்துடன் நின்ற அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் ஆலயம் கண்ணில் பட்டது. அங்கு வந்தவன், அதற்குள் நுழையும் தகுதி தனக்கில்லை என நினைத்து, கோயில் வாசலில் ஓரமாக அமர்ந்தபடி கதறியழுது கொண்டிருந்தான்.

அப்போது, மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் மண்டபத்தில் அமர்ந்து யாரும் அறியாத வகையில் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். நல்லவர்கள் பக்கம் இறைவனின் பார்வை எப்போதுமே வருவதில்லை. அவர்கள் இறப்புக்கு பின்பே நற்கதியடைகின்றனர். கெட்டவர்கள் நன்றாக இருக்க, இறைவன் ஏனோ அருள்புரிந்து விடுகிறான். இது ஆன்மிகத்தில் ஒரு நியதியாக இருக்கிறது. சுந்தரேஸ்வரராகிய பரமசிவன், மீனாட்சியாகிய பார்வதியிடம், தேவி! இதோ வாசலில் ஒருவனைப் பார்த்தாயா? அவன் காமத்தால் தாயையே நிர்ப்பந்தம் செய்தவன். தன் தந்தையையே கொன்றவன். அவனிடம் தான் இன்று விளையாடப் போகிறேன், என்றார். பார்வதிதேவி என்ன நினைத்தாள் தெரியுமா? தனது மணாளன், அந்தக் கொடியவனை கொல்லப்போகிறார் போலும்! அவனுக்கு அது தேவை தான்! தாய்க்கே கொடுமை செய்தவன் இந்த தரணியில் வாழக்கூடாது என்றே நினைத்தாள். சிவபெருமானோ வேறுவிதமாக அவனுக்கு அனுக்கிரஹித்தார். அவர் பார்வதியுடன் வேடர்கள் வடிவில் அவனை அணுகினர். ஏனப்பா வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய்? உள்ளே போ! அவன் முன்னால் அமர்ந்து, உன் கவலைகளையும், நீ செய்த தவறுகளையும் முறையிடு. அவர் அனுக்கிரஹம் செய்வார், என்றார், அந்தக் கொடியவன் தான் செய்த பாவங்களையும் அவர் முன்னால் கொட்டினான். தனக்கு விமோசனமே கிடையாது என்றான். பரமேஸ்வரன் அவனைத் தட்டிக் கொடுத்து, அப்பனே! தகப்பனைக் கொன்ற பழி, தாயையே நிர்ப்பந்திக்கும் நிலை ஆகிய கொடிய பாவங்களுக்காக மனம் வருந்து.

கதறியழு. அதற்காக மன்னிப்பு கேட்டு விட்டு, பொற்றாமரைக் குளத்தில் நீராடு. ஒரு வேளை மட்டும் உஞ்சவ்ருத்தி (பிச்சை) எடுத்து உணவருந்து.கோயிலில் அங்கபிரதட்சணம் செய். உன் தோஷம் நீங்கும், என அருள்பாலித்தார். பார்வதிதேவிக்கு இதுகண்டு வருத்தம். சிவனிடமே கேட்டாள். பக்தர்களுக்கு அருள பலகாலம் தாமதிக்கிறீர்கள்! ஆனால், இவனைப் போன்ற கொடியவர்களுக்கு அருள் செய்கிறீர்களே! இது என்ன நியாயம்? நீங்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. உங்களைப் புரிந்து கொள்ளவும் இயலவில்லை, என்றாள் செல்லமான சிணுங்கலோடு. தேவி! நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் கொடியவர்கள் திருந்த வேண்டும். இதோ! என் கழுத்தைப் பார்! இதை அலங்கரிக்கும் பாம்பு குணத்தில் கொடியது. கொடியதை காப்பதுவும் என் கடமையே என்பதால் தான் இதை ஆபரணமாக அணிந்துள்ளேன், என்றார் சுவாமி. தங்கள் திருவிளையாடலை அறியவல்லவர் யாரும் இல்லை. ஆடுபவரும், ஆட்டுவிப்பவரும் தாங்களே! என்றாள் பார்வதி. அந்த அந்தணகுமாரனும் பலகாலமாக வேடன் சொன்ன பரிகாரங்களைச் செய்தான். கோயிலுக்கு வருவோருக்கு தன்னாலான உதவிகளைச் செய்தான். அவனது தோஷம் நீண்டகாலத்துக்குப் பின் நீங்கியது. பலகாலம் மதுரையிலேயே ஒழுக்கசீலனாக வாழ்ந்த அவன் இறைவன் திருவடி நிழலை அடைந்தான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...