Saturday 16 April 2016

25.பழியஞ்சின படலம்!

ராஜசேகரபாண்டியன் மறைவுக்குப் பின் அவரது மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்று செவ்வனே ஆட்சி நடத்தி வந்தான். அவனது மகன் அனந்தகுண பாண்டியன் அடுத்து பதவியேற்றான். இவனது ஆட்சிக்காலத்தில், மதுரையம்பதிக்கு திருப்புத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தன் மனைவி, குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்.
வரும் வழியில் களைப்பு ஏற்படவே, அவர்கள் ஒரு ஆலமரத்தடியில் தங்கினர். அந்தணர் அங்கு தண்ணீர் கிடைக்கிறதா என பார்க்கச் சென்றுவிட்டார். அவரது மனைவி களைப்பு தாங்காமல் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள். குழந்தை மணலைக் களைந்து விளையாடிக் கொண்டிருந்தது. காற்று ஜிலுஜிலுவென வீசியது. அப்போது, விதி அந்த மரத்தில் இருந்து விளையாடியது. யாரோ ஒரு வேடன், அந்த மரத்தில் தங்கியிருந்த புறாக்களை வேட்டையாட எய்திருந்த அம்பு ஒன்று மரக்கிளையில் சிக்கியிருந்தது. காற்று வேகமாகவே, அந்த அம்பு மரத்தில் இருந்து கீழே விழுந்தது. மிக உயரத்தில் இருந்து விழுந்ததால் அது படுத்திருந்த அந்தணரின் மனைவி வயிற்றில் பாய்ந்தது. அவள் அலறித்துடித்தாள். சுற்றிலும் யாருமில்லை. அந்தணரும் வரக்காணோம். ரத்தப்பெருக்கு அதிகமாகவே, அவளது உயிர் பிரிந்து விட்டது. அந்த சமயத்தில், அந்தப் பக்கமாக ஒரு வேடன் வந்தான். அவன் இந்த அம்பை எய்த வேடன் அல்ல! புதியவன். அவனும் களைப்பால் அந்த மரத்தடிக்கு வந்தான். இறந்து கிடக்கும் அந்தணரின் மனைவியையோ, அவளது குழந்தையையோ அவன் கவனிக்கவில்லை. களைப்பு மிகுதியால் அவன் மரத்தின் மற்றொரு புறத்தில் படுத்து தூங்கி விட்டான். தண்ணீர் கொண்டு வரச்சென்ற அந்தணர் திரும்பினார். தன் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு துடித்தார்.

பக்கத்தில் குழந்தை ஏதுமறியாமல் விளையாடிக் கொண்டிருந்தது. அலறி அழுத அவர், சுற்றுமுற்றும் பார்த்தார். மரத்தின் மறுபுறத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேடனைக் கண்டார். அடப்பாவி! அநியாயமாய் என் மனைவியைக் கொன்றுவிட்டாயே! என்றபடியே அவனருகே சென்றார். உறங்கிக் கொண்டிருந்த வேடனை தட்டி எழுப்பிய அந்தணர், அடப்பாவி! என் மனைவியை அநியாயமாகக் கொன்று விட்டாயே! நாங்கள் உனக்கு என்ன பாவம் செய்தோம்? அவள் உனக்கு என்ன கேடு செய்தாள்? என்று கோபத்துடன் கேட்டார். தூக்கக்கலக்கத்தில் இருந்த வேடன் ஏதும் புரியாமல் விழித்தான்.யார் இவர்? உறங்கிக் கொண்டிருந்த தன்னை எழுப்பி, சம்பந்தமில்லாமல் ஏதோ கேட்கிறாரே! எனக்கருதியவன், அதன்பிறகு தான் அங்கு நடந்த விபரீதத்தைப் புரிந்து கொண்டான். ஐயோ! நான் இந்தப் பெண்ணைக் கொன்றேனா? ஆண்டவன் சத்தியமாக இல்லை ஐயா! நான் வேடன் தான்! ஆனால், மனிதர்களை நான் வேட்டையாடுவதில்லை. இந்தப் பெண் எப்படி இறந்தாள் என எனக்குத் தெரியாது. இவள் உடம்பில் பதிந்துள்ள அம்பு என்னுடையதல்ல, என்று கதறினான். அந்தணர் விடவில்லை. அடேய் பொய்யனே! வாடா அரண்மனைக்குப் போகலாம். குலோத்துங்க ராஜாவும், அவரது செல்வர் அனந்தகுண பாண்டியரும் அரண்மனையில் தான் இருப்பார்கள். அவர்களிடமே நீதி கேட்போம். அவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம், என்றார் அந்தணர். வேடனும் கலங்கவில்லை. தவறு செய்திருந்தால் தானே பயப்பட வேண்டும்.

தாராளமாக செல்வோம், வாருங்கள், என்று அந்தணரையும் அழைத்துக் கொண்டு சென்றான். தனது மனைவியின் உடலை அரண்மனை வாசலில் கிடத்திய அந்தணர், காவலன் மூலம் ராஜாவுக்கு சேதி சொல்லியனுப்பினார். அப்போது அரண்மனையில் இருந்த குலோத்துங்க ராஜா வெளியே வந்தான். அந்தணர் தனது வழக்கை அவனிடம் எடுத்துரைத்தார். குலோத்துங்கன் வேடனை பிடித்து உலுக்காத குறையாக கடுமையாக விசாரித்தான். வேடனோ, இந்தக் கொலையை நான் செய்யவே இல்லை ராஜா! என்றான். இருப்பினும், அவன் மீது ராஜாவுக்கு கடும் சந்தேகம் ஏற்பட்டது. வேடனை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தேனும் உண்மையை வரவழைக்க காவலர்களுக்கு உத்தரவிட்டான். அவர்களும் அவனை எவ்வளவோ சித்ரவதை செய்தும், அவன் தனது நிலையில் உறுதியாக இருந்தான். குலோத்துங்கனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அந்தணரே! உமது மனைவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அதற்குரிய செலவைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஐந்துநாள் கழித்து இங்கு வாருங்கள். உங்களுக்கு சரியான தீர்ப்பு சொல்லப்படும், என்றான். அந்தணரும் கிளம்பினார். மன்னன் குலோத்துங்கன் மீனாட்சியம்மை திருக்கோயிலுக்குச் சென்றான். சுந்தரேஸ்வரரை மனதார வணங்கினான். சொக்கநாதப் பெருமானே! இக்கட்டான சூழலை எனக்கும், என் மகனுக்கும் உருவாக்கும் வகையிலான வழக்கு ஒன்று வந்துள்ளது. இதில் யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு ஒருவேளை தவறாகிப் போய்விடுமானால், மதுரையின் மாண்பு பாழாகி விடும். பாண்டியதேசம் நீதி தவறிய நாடு என்று உலகெங்கும் பறைசாற்றப்படும். எனது செங்கோல் வீழும். வெண்கொற்றக்குடை சாயும். இந்த நிலையில் இருந்து நீ தான் என்னைக் காத்தருள வேண்டும், என்றான்.

அப்போது பேரொளி ஒன்று பிறந்தது. அந்த ஒளியில் இருந்து ஒலி அலைகள் எழுந்தன. குலோத்துங்கா! கலக்கம் வேண்டாம், இன்னும் சில நாட்களில் செட்டியத்தெருவில் ஒரு திருமணம் நடக்க இருக்கிறது. அந்த மணவிழாவுக்கு நீயும், உன் அமைச்சரும் மாறுவேடத்தில் வாருங்கள். உண்மை புரியும், என்றது. சொக்கநாதரே தன்னிடம் நேரில் பேசியதாக மகிழ்ந்த மன்னன், கவலை நீங்கி புறப்பட்டான். செட்டியத்தெருவில் எப்போது திருமணம் நடக்கப்போகிறது என்ற விபரத்தை அமைச்சர் மூலமாகத் தெரிந்து கொண்டான். மணநாளன்று, இருவரும் சென்று மணப்பந்தலில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து கொண்டனர். அப்போது எமகிங்கரர்கள் இருவர் தங்கள் உருவத்தை மறைத்துக் கொண்டு அந்த பந்தலுக்குள் வந்தனர். அவர்கள் மன்னனின் அருகில் அமர்ந்தனர். திடீரென ராஜாவுக்கும், அமைச்சருக்கும் அவர்களின் குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தால் ஆள் யாரும் தென்படவில்லை. ஒரு கிங்கரன் மற்றொருவனிடம், ஏ எமதூதா! இதோ! இந்த மணமேடையில் வீற்றிருக்கும் மணமகனின் உயிரைக் கொண்டு வர வேண்டும் என்பது நமது தலைவர் எமதர்ம ராஜாவின் கட்டளை. இவன் உயிரை எப்படி பறிக்கலாம்? என்று யோசனை கேட்டான். அதற்கு இன்னொருவன், அட போடா! இதென்ன பிரமாதம்! கடந்த வாரம் மரத்தடியில் ஓய்வெடுத்த அந்தணரின் மனைவியின் வயிற்றில் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அம்பை விழச்செய்து உயிர் வாங்கினோமே! அதுபோல், இவ்வீட்டின் பின்னால் நிற்கும் மாட்டை அவிழ்த்து விடுவோம், அது நேராக மணமேடைக்கு ஓடி வந்து அவனைக் குத்திக் கொல்லட்டும். நாம் அவனது உயிருடன் திரும்பி விடலாம், என்றான். குலோத்துங்கனும் அமைச்சரும் அதிர்ந்து விட்டனர். ஆனாலும், வேடன் மீது தவறில்லை என்ற உண்மை புரிந்து விட்டது. திடீரென பேச்சுக்குரல் நின்றது.

மன்னனும், அமைச்சரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதற்குள் கண்ணுக்குத் தெரியாத எமகிங்கரர்கள் அந்த வீட்டின் பின்னால் சென்றனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த காளையின் கயிறு அவிழும்படியாகச் செய்தனர். கட்டறுபட்ட காளை வேகமாக ஓடி வந்தது. மணமேடையை நோக்கிப் பாய்ந்தது. கூட்டத்தினர் சிதறி ஓடினர். மணமகள் அலங்கார கோலத்துடன் மணமேடையை நோக்கி வந்தாள். அவளும், அவளை அழைத்து வந்த தோழிகளும் நிலை குலைந்து ஓடினர். மணமேடையில் இருந்த மணமகன் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்டான். காளை அவனை நெருங்கியது. அந்தக்காளை கூட்டத்தை இடித்து தள்ளிக்கொண்டு மணமகனை நெருங்கியது. மணமகனைக் காப்பாற்ற முயன்றவர்களை விரட்டியடித்தது. தன் கொம்புகளால் அவனைக் குத்திச் சாய்த்தது. அங்கிருந்து பாய்ந்து ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணமகன் சற்றுநேரத்தில் இறந்தான். குலோத்துங்கனும், அமைச்சரும் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் நேராகச் சிறைக்குச் சென்ற அப்பாவியான வேடனிடம் மன்னிப்பு கேட்டனர். அவனுக்கு இழைத்த கொடுமைக்காக வருந்தினர். அவனுக்கு வேண்டிய அளவு பொன்னைக் கொடுத்து, அந்தணரிடம் நடந்த உண்மையை கூறினர். அவருக்கும் பெரும்பொருள் கொடுத்து மறுமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ வலியுறுத்தினர். வீண்பழி ஏற்று புண்பட்ட மனதுடன் உள்ளவர்களுக்கு புனுகு தரும் பூபதியாக விளங்குகிறார் சோமசுந்தரக் கடவுள்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...