Thursday 13 February 2014

பதினொன்றாம் நாள் போர் - துரோண பருவம்

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, பாண்டவர்களுக்கும், போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும், ஏன் தேவர்களுக்கும் கூடத்தான். பீஷ்மனை போன்ற ஒரு வீரன், சத்யவான், தர்மத்தின் பாதுகாவலன், இனி ஒரு முறை அந்த யுகத்தில் மட்டும் அல்ல எந்த யுகத்திலும் பிறக்கப்போவதில்லை. சரித்திர நாயகனாகவே அம்பு படுக்கையில் நித்திரை கொண்டிருந்தார் கங்கையின் மைந்தன்.......



பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது. துரோணர் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் துரியோதனன் “எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். இந்த போரினை நான் வேறு ஒரு வழியில் வெற்றி கொள்கிறேன் ” என கட்டளையிட்டான். பீஷ்மர் இல்லாத நிலையில் கர்ணனை போர் செய்ய அனுமதிக்குமாறு துரோணரை வேண்டினான் துரியோதனன். துரோணரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்தார். செய்தி கர்ணனின் பாசறைக்கு பறந்தது. “வருகிறேன் அர்ஜுனா !!!! துரியோதனா உனக்கு நன்றி செலுத்தும் நேரம் இது.” என்று கர்ஜித்தான். கௌரவ படைகள் முகத்தில் நம்பிக்கை ரேகை பரவியது.

தருமரை உயிருடன் பிடித்து விட்டால் அவரை மீண்டும் சூதாட வைத்து, தோற்கடித்து, ஆயுட்காலம் முழுதும் வனவாசம் அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன். சகுனியின் பேடித்தனம் இந்த சூழ்ச்சியின் பின் இருந்தது. இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது. திருஷ்டத்துய்மன் அதை தடுக்க தன்னால் இயன்றதை செய்வேன் என்று சூளுரைத்தான். வியூகம் வகுத்தான். அதனால் தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அன்று துரோணர் சகட வியூகம் வகுத்தார். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார். இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே அவருக்கு துணையாக வந்தான். பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான். துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். தருமரை சுற்றி வளைத்து போர் செய்தனர். அர்ஜுனனின் அஸ்திரங்கள் தருமருக்கு கேடயமாக அமைந்து அவரை பாதுகாத்தது. ஆஞ்சநேயரின் அருள் பெற்ற பீஷ்மன் அனைவரையும் பந்தாடினான்.

கௌரவ படைகள் அனைத்தும் ஒருவனது வருகைக்காக முகம் சோர்ந்து காத்துகொண்டிருந்தது.....

மாவீரன் கர்ணன் வருகை :

இவன் வருகையை “அகில உலகும் நடுங்கிய இடியென நுழைந்தான் சூரியபுத்திரன் ” என்று கூறுகிறது மஹாபாரதம்.

தன் தந்தையாகிய சூரியனுக்கு வணக்கங்களையும், நட்பின் கடன் தீர்க்க வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றியையும் செலுத்திவிட்டு, தன் ரத்தத்தில் ஏறினான். போர்க்களம் நோக்கி புறப்பட்டான். ஆயிரம் சூரியனின் பிரகாசம் கொண்டவனாய் காட்சியளித்தான். காற்றைவிட வேகமாய் பாய்ந்தான். ஆகாயத்தை விட தெளிவான சிந்தனையுடன் போர்களத்தை கவனித்தான். நீரை போல் சுழன்றான். மொத்த பூமியின் வலிமையுடன் போரிட்டான். நெருப்பை போல் தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தான்.

அவனது குறிக்கோள் ஒன்று மட்டுமே. அது துரியோதனனை அஸ்தினாபுரத்து அரியாசனத்தில் அமர வைப்பதே. அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நெருப்பு அவனுள் எப்போதும் எரிந்து கொண்டே இருந்தது. பாண்டவர்கள் திகைத்தனர். பரந்தாமன் பார்த்தனை பார்த்து “ பார்த்தாயா கர்ணனை? தெரிந்துகொள் அவன் ஆற்றலை. கர்னணனை நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் நீ உன்னை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம் வரும் ” என்றார்.

கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. அவன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு, அது புறப்பட்டதா இல்லையா என்று தெரியும் முன் இலக்கை தாக்கியது. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. துரியோதனன் பூரிப்படைந்தான். கௌரவ படைகள் ஆர்பரித்தன. வீரியத்துடன் போர் புரிந்தன. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது.

மற்றறொரு முனையில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்களத்தில் தன் பெயரை நிலைநாட்டி கொண்டிருந்தான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் வெல்ல முடியாதவனாய் காட்சியளித்தான். தன் மகனின் வீரத்தை கண்டு அர்ஜுனன் மெய் சிலிர்த்தான். பீமனும் அவன் மகன் கடோட்கஜனும் அபிமன்யுவிர்க்கு உதவினர். அபிமன்யு துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு மீண்டும் கிரௌஞ்ச வியூகத்தின் உள்ளே திரும்பினான். இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான். சல்லியனின் வில்லையும் தேரையும் சுலபமாக முறித்தான் அபிமன்யூ. உங்களுக்கான நேரம் இன்னும் நெருங்கவில்லை கூறியபடி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அர்ச்சுனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை. பீமனும் கடோட்கஜனும் கர்ணனை தாக்க, கர்ணன் அவர்களுடன் போரிட்டு கொண்டிருந்தான். அபிமன்யு, அர்ஜுனன், பீமன் மற்றும் கடோட்கஜனின் போர் ஆற்றலை கண்ட கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். துரோணரும் சோர்ந்து போனார்.

இந்நிலையில் சூரியன் தன் மேற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு அஸ்தமம் ஆனார்...... அன்றைய போர் முடிந்தது.......

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...