Saturday 15 February 2014

எடை குறைய எளிய வழிகள்...

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான்.


உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு.

இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்பவர்களா நீங்கள்? பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப் போகிறோம்.

முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான்.

இனி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

1. எதிர்மறைக்(negetive) கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்:

பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம்.
இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.

நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உடலில் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப் படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம்.

பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உடலின் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல் / சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது.

ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப் படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உடலில் சேமிக்கப் பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப் படுகிறது.

பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு(cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கிழங்கு(asparagus), பீட்ரூட் முதலியன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முதலியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.

பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை. நிறையவே எடைக்குறைப்பு செய்ய வாழ்த்துக்கள்.

இதற்கு முந்தைய கட்டுரையில் நெகடிவ் கலோரி உணவுகளை அதிகம் உட்கொள்வதின் மூலம் எடை குறைய வழி உண்டு என்று பார்த்தோம். இன்னும் சில எளிய வழிகளை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
தண்ணீர் வைத்தியம்:

தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.

தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.
2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
3. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்.
4. மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.

முடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

உணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப்பானம் கரைக்கிறது.

அதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள்? அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? சரி, சர்க்கரையைத் தவிருங்கள். மிகக் கடினமாகத் தோன்றுகிறதா? அழகான, 'சிக்'கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.

அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.

கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).

பொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை, பாதாம், முந்திரி, நிலக்கடலை போன்றவற்றைச் சாப்பிடவும்.


இனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.

காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.

எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.

இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு - எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.

தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.


உணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும் (சென்ற கட்டுரையில் கண்டது நினைவிருக்கிறதா?)

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு:

வீணாகிறதே என்ற கவலையில் மிச்சமாகும் உணவுவகைகளை எல்லாம் சாப்பிட்டுவிடும் பழக்கம் பொதுவாக நிறையப் பெண்களிடம் உண்டு. உங்கள் எண்ணம் நல்லதுதான். ஆனால், மிச்சமான உணவுகள் நாய்க்கோ, பிச்சைக்காரர்களுக்கோ குப்பைத்தொட்டிக்கோ போகுமானால் பணம் மட்டும்தான் வீண். உங்கள் வயிற்றுக்குப் போனாலோ (தேவையற்ற உணவுகளைப் போடும் குப்பைத்தொட்டியல்ல உங்கள் வயிறு) உங்கள் உடல் நலமும் கெடுகிறது. எனவே கண்டிப்பாக அந்தப் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அளவாகச் சமைத்து, தேவையானதை மட்டும் சாப்பிடுங்கள். ஆரோக்கியம் உங்களுடையது.
சென்ற இரு கட்டுரைகளில் உணவுப்பழக்கத்தின் மூலமும், தண்ணீர் அருந்துவதின் மூலமும் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்று கண்டோம். இக்கட்டுரையில் சில எளிய பயிற்சிகளைக் காணலாம்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன. அதிலும் குறிப்பாக, பெரு நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, இந்தத் தொல்லை சற்று அதிகமாகவே உள்ளது. எனவே, கிடைக்கும் நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதிக நேரம் செலவிடத்தேவையில்லாத சில எளிய பயிற்சிகளையும் பார்ப்போம்.

காலையில் எழுந்ததும், குறைந்த பட்சம் பத்து நிமிடம் உங்கள் ஆரோக்கியத்திற்காகச் செலவிடுங்கள். இரவு தூங்கி எழுந்தவுடன் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குவதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இப்பயிற்சிகள் உதவுகின்றன. அத்துடன், கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள அதிகப்படியாக உள்ள கொழுப்பினை நீக்கவும் செய்கின்றன.

1. நிமிர்ந்து நேராக நில்லுங்கள். பின் கைகளை மேலே தூக்கியவாறு, குதிகால்களைத் தரையில் இருந்து உயர்த்தி நுனிப்பாதங்களால் சில வினாடிகள் நிற்கவும். பிறகு பழைய நிலைக்கு வரவும்.(இதே போல் 3 முறை செய்யவும்). இது பாதங்களுக்கும் உடலுக்குமான பயிற்சி.
2. கைகளை முன்புறம் நீட்டியவாறு, 3 முறை (தோப்புக்கரணம் போடுவது போல்) உட்கார்ந்து எழுந்திருங்கள். (முட்டிக்கால்களுக்கானது)
3. இரு கைகளையும் தலைக்கு மேல் நீட்டியவாறு குனிந்து, கால் விரல்களைத் தொட முயலுங்கள்.
4. கைகளை (ஒவ்வொன்றாக) பின்புறமிருந்து முன்புறமாகவும், முன்புறமிருந்து பின்புறமாகவும் 10 முறை சுழற்றவும். இப்பயிற்சி, தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள பிடிப்பை நீக்குவதோடு, பருமனாக உள்ள கைகளை இளைக்க வைக்க உதவுகிறது.
5. கழுத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மும்மூன்று முறை சுழற்றவும். பின், இடப்பக்கம், வலப்பக்கம், மேல் கீழ் திசைகளில், தலையைத்திருப்பி, பயிற்சி செய்யவும். ஸ்பாண்டிலைடிஸ் வராமல் தடுக்கும் இப்பயிற்சி, பருமனான கழுத்து உள்ளவர்கள், அழகிய நீண்ட கழுத்தினை அடையவும் உதவுகிறது.

இவை தவிர, நேரம் இருக்குமானால், கால்களை அகட்டி நின்றுகொண்டு, குனிந்து வலக்கையால், இடப் பாதத்தைத் தொடவும். அப்பொழுது, உங்கள் இடக்கையானது, முதுகுக்குப் பின்னால் இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். நிமிரவும். மீண்டும், இடக்கையால் வலப்பாதத்தைத் தொடவும். இப்பொழுது, வலதுகை உங்கள் முதுகுக்குப் பின்னால் இருக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி பத்துப் பத்துமுறை செய்யவும். வயிறு, இடுப்புப் பகுதி இளைக்க மிகச் சிறந்த பயிற்சியாகும் இது.

இனி வேலைகளுக்கு நடுவிலேயே செய்யக்கூடிய, செய்ய வேண்டிய சில எளிய பயிற்சிகள்.

1. வீட்டிற்குள் நடமாடுகையில், வயிற்றை எக்கிக்கொண்டு ( மூச்சை உள்ளிழுத்து, வயிற்றை இறுக்குவது), நுனிக்காலால் நடக்கவும்.
2. பயணம் செய்கையிலோ, அலுவலகத்தில் இருக்கும்போதோ, கால்களை முன்னும் பின்னுமாகவோ, மேலும் கீழுமாகவோ ஆட்டிக்கொண்டே இருக்கவும். கை காலை ஆட்டுவதும் ஒரு செயலே. இதற்கும் சில கலோரிகள் செலவாகின்றன.
3. மின் தூக்கியை கூடிய மட்டும் தவிர்த்துவிடவும். குறைந்த பட்சம், ஒரு/இரு மாடிக்காவது, படிகள் மூலம் ஏறிச் செல்வதை/ இறங்கி வருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
4. கணிணியில் பணி புரிபவரா? அரை மணி நேரத்திற்கு ( குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு) ஒரு முறை நாற்காலியை விட்டு எழுந்து, பத்தடி நடந்து விட்டு வரவும்.
5. நாற்காலியில் அமர்ந்திருக்கையில், முடிந்தால், கால்களுக்குக் கீழ் ஒரு பந்தினை வைத்து உருட்டியவாறு இருங்கள். ( வீட்டில் மட்டுமாவது)
6. சிறு குழந்தைகள் இருக்கிறார்களா உங்கள் வீட்டில். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருக்கும்பொழுது, அவர்களுடன் பந்து விளையாடுதல், செயல்பாட்டுடன் (Action) பாடல்கள் (Rhymes) சொல்லிக்கொடுத்தல் அல்லது ஓடிக் குதித்து விளையாடுதல் ( உங்கள் வயதை, தயவு செய்து மறந்து விடுங்கள்) போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி, உங்களுக்குப் பயிற்சி.
7. அலுவலத்தில் உங்களுக்குத் தேவைப்படும் கோப்புகளை நீங்களே எழுந்து சென்று எடுத்து வாருங்கள்.
8. மதிய உணவு / இரவு உணவு முடிந்ததும், பத்து நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்.
9. வீட்டில் சிறு குழந்தைகள் இல்லையெனில், கூடுமானவரை சமையல் பொருட்கள், புத்தகங்கள், தொலைபேசி முதலானவற்றை, குனிந்து எடுக்கும்படியான உயரத்தில் வைக்கவும். ஒவ்வொரு முறையும் குனிந்து எழுவது ஒரு நல்ல பயிற்சி.
10. அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளவும்.
11. படிக்கும்பொழுதோ, கைபேசியில் பேசும்பொழுதோ நடப்பதைப் பழக்கமாக்குங்கள்.
12. எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக நடக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு, நீங்கள் செலவு செய்யும் கலோரிகள் அதிகரிக்கின்றன.
13. மிகவும் களைப்பாக இருக்கையிலோ, தூக்கம் வருகையிலோ மட்டுமே படுத்துக்கொள்ளுங்கள். நிற்பதும், நடப்பதுமே நல்லது.
14. நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் அமர்ந்திருப்பதையும் தவிர்க்கவும். அப்படி இருக்க நேர்ந்தால், வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு, நன்கு நிமிர்ந்த நிலையில் உட்கார்வது நல்லது.
15. பொதுவாக சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருந்தாலே, உடலில் எரிக்கப்படும் கலோரிகள் அதிகரிக்கும், உடல் இளைக்க வழி பிறக்கும்.

மேற்கூறிய எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஒன்றுண்டு. அது மனதை, மலர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது. மன அழுத்தம் அதிகரிக்கும்பொழுது சுரக்கும் கார்டிசால் என்ற திரவம், உடலில் கொழுப்பு தேங்க வழி வகுத்து, நம்மைப் பருமனாக்கிவிடுகிறது. எனவே.....கவலைக்கு இடம் கொடாமல், எதிர்மறைச் சிந்தனையைத் தவிர்த்து, மனத்தை இலேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் உங்களுடையது.


உணவில் உள்ள கலோரியை அளவிடுவது குறித்தும், எந்தெந்த வேலையில் எவ்வளவு கலோரி எரிக்கப்படுகிறது என்பது குறித்தும் நம் அடுத்த கட்டுரையில் விவரிக்கும் வரை....
இதுவரை கொடுத்த உத்திகளைப் பயன்படுத்தி வாருங்கள்! பலன்களைப் பாருங்கள்!!

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள். பயன்படுத்திப் பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. ஆன்மீகம் -- இரண்டு சுழி “ன்” தான் வர வேண்டும்

    ReplyDelete

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...