Thursday 6 February 2014

மூன்றாம் நாள் போர்

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர். துரியோதனன் அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான். அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான். அவன் வலப்பக்கமாக நின்றான். அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும், அர்ச்சுனனும் நின்றனர். தர்மர் இடையில் நின்றார். மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர். அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான். பீமன் , துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான். ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று “உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால் என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்” என்றான்.

அது கேட்டு நகைத்த பீஷ்மர் “உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன். பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது. என் ஆற்றல் முழுதும் ஆயினும் உனக்கே தருவேன்” என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார். கௌரவர் படை உற்சாகம் அடைந்தது. பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அர்ச்சுனன் உள்பட அனைவரும் தளர்ந்து காணப்பட்டனர்.

கண்ணன் அர்ச்சுனனிடம் “அர்ச்சுனா….என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும், துரோணரையும் வெல்வேன் என்றாயே….அதை மறந்து விட்டாயா?” என்றார்.

உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார். எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.

பீஷ்மர் மீது கொண்ட அன்பினால் அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன் தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி…..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனார். சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார். இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார். ''கண்ணன் கையால் மரணமா? அதை வரவேற்கிறேன்” என்று தூய சிந்தனை அடைந்தார்.

அர்ச்சுனன் கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி ஓடோடி கண்ணனிடம் சென்று காலைப் பிடித்துக் கொண்டு “ நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச் செயலா? அப்படியாயின் இதோ புறப்பட்டேன்….சினம் வேண்டாம்” என வேண்டினான்.

கண்ணனின் ஆவேசம் தணிந்தது. பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர்.

மாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது…… 

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...