Saturday 18 May 2013

29.மாயப் பசுவை வதைத்த படலம்!

அனந்தகுண பாண்டியன் நாகத்தைக் கொன்று பெற்ற வெற்றி, அவனது பேருக்கும் புகழுக்கும் மேலுமொரு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. இதன்பிற்கும் சமணர்கள் திருந்தவில்லை.
தங்கள் ஆதிக்கத்தை மதுரையில் நிலைநிறுத்த எண்ணிய அவர்கள் மீண்டும் அனந்தகுண பாண்டியனுக்கு தொல்லை கொடுத்தனர். அபிசார ஹோமம் நடத்தி, இன்னொரு அரக்கனை உருவாக்க எண்ணினர். இப்போது, அவர்கள் ஒரு தந்திரத்தையும் கையாண்டனர். சைவர்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்கள். அதை வழிபாடு செய்பவர்கள். அந்தப் பசுவின் மூலமே அவர்களை அழிக்க எண்ணினர் அவர்கள். ஹோமம் துவங்கியது. யாக குண்டத்தில் இருந்து அதிபயங்கர அசுரன் ஒருவன் தோன்றினான். எஜமானர்களே! உத்தரவிடுங்கள். உங்களுக்காக நான் என்ன பணி செய்ய வேண்டும்? என்றான். பசுவாசுரனே! நீ ஒரு பசுவின் வடிவெடுத்து மதுரை மக்களை அழித்து விடு. பலம் கொண்ட மட்டும் உன் கொம்புகளால் முட்டிமோதி, மாளிகைகளையும், அங்காடிகளையும், இன்னும் மதுரையின் முக்கிய இடங்களை யெல்லாம் நொறுக்கி விடு, என்றனர். பசுவாசுரனும் புறப்பட்டான். நகருக்குள் புகுந்த அவன் வானத்துக்கும் பூமிக்குமாக பெரிய பசுவாக உருவெடுத்தான். தன் கூரிய கொம்புகளை தாழ்த்திப் பிடித்து பலரைக் குத்திக் கொன்றான். இந்த தகவல் அனந்தகுண பாண்டியனுக்கு வரவே, அவன் பசுவை அடக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

எல்லாம் அந்த சொக்கலிங்கப் பெருமானுக்கு தெரியுமல்லவா? அவர் முன்னால் யார் தான் நிற்க முடியும்? அவரையே சரணடைந்தான் அவன். தன் பக்தனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தார் சோமசுந்தரர். அவர் தன் பாதுகாவலரும், வாகனருமான நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தியே! நீ உடனே ரிஷப வடிவெடுத்துச் செல். மதுரையை அழிக்க வந்துள்ள அந்த மாயப்பசுவைக் கொன்று வா, என உத்தரவிட்டார். இறைவனின் ஆணையைப் பெற்ற நந்தி, கண்டவர் எவரும் அஞ்சும் வண்ணம் சினந்து எழுந்தது. அதன் கண்கள் வேள்விக் குண்டத்தழல் போல் கொதித்தன. நாக்கு நாசினியைத் துழாவியது. தலை வானுலகைத் தொட்டு நின்றது. வளைந்த கொம்பிலே செம்மணிப் பூண் சுற்றிக் கிடந்தது. முதுகிலே பொற்கவசம் மின்னியது. கழுத்தில் வீரமணி ஜொலித்தது. இப்படி ஆரவாரமாக கிளம்பினார் நந்தியெம்பெருமான். தன்னையும் விண்ணளவுக்கு உயர்த்திக் கொண்டு, கொம்புகளை வீசியபடியே வேகமாக சென்றார். மாயப்பசுவை வழிமறித்தார். இரண்டுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில், தன் கொம்புகளால் பசுவின் வயிற்றைக் கிழித்தார். பசு பயங்கர அலறலுடன் சாய்ந்து உயிரை விட்டு, மலை வடிவம் எடுத்தது. அதுவே பசுமலை என்ற பெயரில் இன்றளவும் மதுரையில் இருக்கிறது. இப்படியாக, அனந்தகுண பாண்டியன் சைவம் தழைக்க பல நற்பணிகளைச் செய்தான். அவனது காலத்திற்குப் பிறகு, அவனது மகன் குலபூஷண பாண்டியன் மன்னர் பொறுப்பேற்றான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...