Saturday 18 May 2013

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!

தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அகத்தியர் கற்றுத்தந்த இலக்கணத்திற்கு அகத்தியம் என்று அவரது பெயரைச் சூட்டினர். இலக்கண அடிப்படையில் அதுவரை தாங்கள் இயற்றிய பாடல்களைப் புலவர்கள் சரிபார்த்துக் கொண்டனர்.
அதன்பின், இலக்கண அடிப்படையில் தங்கள் பாடலே சிறந்தது என ஒருவருக்கொருவர் வாதிட்டனர். யார் பாடல் உயர்ந்தது என ஒரு கலவரமே நடந்தது. காலப்போக்கில் இது பெருமளவில் உருவெடுத்து, சங்கமே அழியும் நிலை வந்துவிட்டது.இது தொடர்ந்தால் சங்கத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், அவர்கள் சுந்தரேஸ்வரரிடமே ஓடினர். இறைவா! எங்களில் யாருடைய பாடல் சிறந்தது என்று அறியும் ஆவலில் சண்டையிடுகிறோம். தாங்களே இவற்றைப் படித்து, எது சிறந்தபாடல் என விடையளிக்க வேண்டும், எனக்கூறி வணங்கினர்.அப்போது சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் தோன்றினார். புலவர்களே! உங்கள் பாடலில் எது உயர்ந்தது என்பதை நமது நகரில் வசிக்கும் வணிகர் தனபதியின் மகனாலேயே முடியும். நீங்கள் அங்கே சென்று, அந்தப் பிள்ளையிடம் சுவடிகளைக் கொடுங்கள். அவன் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், என திருவாய் மலர்ந்தார். புலவர்கள் தனபதியின் இல்லத்துக்கு விரைந்தனர். சங்கப்புலவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்தது கண்ட தனபதியின் துணைவி குணசாலினி மிகுந்த ஆனந்தமடைந்தாள். அதே நேரம் அவர்கள் அங்கு வந்த காரணம் தெரியாமல் தவித்தாள்.

புலவர்கள் அவளிடம், அம்மா! வணிகர் எங்கே? உங்கள் பிள்ளை இருக்கிறாரா? என்றனர். இருவரும் இங்கு தான் உள்ளனர், என்றதும், உங்கள் பிள்ளை ருத்ரசர்மனை நாங்கள் காண வேண்டும். சுந்தரேஸ்வரப் பெருமானே அவரைப் பார்த்து, எங்கள் பாடல்களில் எது சிறந்தது என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனால் பிறவியிலேயே பேச முடியாதே. அவன் எப்படி உங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் , என்றாள் அவள். புலவர்கள் சிரித்தனர். அம்மா! இந்தத் தகவல் எங்களுக்கு முன்பே தெரியும். இந்த விஷயத்தையும் சுந்தரேஸ்வரப் பெருமான் எங்களிடம் சொல்லிவிட்டார், என்றதும் ஆச்சரியப்பட்ட அந்தத்தாய் பேச முடியாத தன் பிள்ளைக்கு இத்தகைய ஒரு பெருமையா? சுந்தரேஸ்வரா! மதுரை மண்ணில் வசிக்கும் யாரையும் நீ கைவிட்டதில்லை, என கோயில் இருக்கும் திசைநோக்கி கைகூப்பி வணங்கினாள். சங்கப்புலவர்கள் ருத்ரசர்மனைச் சந்தித்தனர். தங்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னார்கள். தமிழ்ச்சங்கத்திற்கே வந்துவிட்டார் ருத்ரசர்மன். புலவர்கள் தங்கள் பாடல்களை பாட ஆரம்பித்தனர். அவற்றில் பிடித்தமானவற்றை தாளம் போட்டு ரசித்துக் கேட்டார் அவர். இறுதியாக நக்கீரர்,கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவை என தீர்ப்பளித்தான். அதற்காக மற்ற பாடல்களையும் அவர் புறந்தள்ளவில்லை. அவற்றிலுள்ள குற்றங்குறைகளைத் திருத்திக் கொடுத்து, அவற்றையும் அவையில் அங்கீகரிக்கச் செய்தார்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...